1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Sunday, March 4, 2012

சூரிய ஒளியில் மின்சாரம் - தற்போதைய நிலை

இப்போது மின்வெட்டு அதிக அளவில் இருக்கிறது. கோடையில் இன்னும் அதிகமாகும் என்று தோன்றுகிறது. டீசல் விலையும் ஏறிக் கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் சூரிய ஒளி மின்சாரம் சரிவருமா? எந்த சூழ்நிலைகளுக்கு சரிப்படும் என்பது பற்றி நான் சேகரித்த விவரங்கள் இங்கே.


முதலில் இந்தியாவில் மின்சாரம் தேவை மற்றும் பங்கிடப்படும் முறை பற்றி சில விவரங்கள். நம் மின்சாரத்தை பயன்படுத்தும் போது வீட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு இவ்வளவு, இதே தொழிற்சாலையில் ஒரு யூனிட்க்கு இவ்வளவு என்று வேறு வேறு விலை உண்டு. ஆனால் வீட்டுக்கு என்று எடுத்துக் கொண்டால், ஒரு யூனிட்டை காலையில் பயன்படுத்தினாலும், இரவில் பயன்படுத்தினாலும் அதே விலைதான் தமிழக அரசாங்கம் வாங்குகிறது.


மின்சாரம் பயன்படுத்தும் அளவு


பொதுவாக தொழிற்சாலையில் பகலில் அதிகம் மின்சாரம் பயன்பாடு இருக்கும். இரவில் சில தொழிற்சாலைகளே இயங்குவதால் அவ்வளவாக மின்சாரத் தேவை இருக்காது. வீட்டிலோ, காலையில் அதிக அளவு தேவையும் மாலையில் அதிக தேவையும் இருக்கும். பகலிலும் இரவிலும் ஓரளவே இருக்கும். காலையில் மிக்சி, மின்சார குக்கர் என்று இருக்கலாம். மாலையில் தொலைக் காட்சி, கிரைண்டர் என்று இருக்கலாம். பகலில் வீட்டில் ஆள் இருந்தால் மின்விசிறி, இரவில் மின் விசிறி என்று ஓரளவு தேவை இருக்கும்.
மொத்தத்தில் காலையிலும் மாலையிலும் அதிக அளவு மின்சார தேவை இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் peak demand என்று சொல்வார்கள்




மின் சந்தை


ஒவ்வொரு நாளும் மின்சாரத்தை தமிழக அரசு ‘இந்திய மின்சார சந்தை’யில் வாங்கித் தரும். இப்படி வாங்கும்போது அதன் விலை என்னவாக இருக்கும்? நாம் வீட்டில் பயன்படுத்தினால் எல்லா நேரத்திலும் ஒரே விலை என்று பார்த்தோம். ஆனால், இந்திய மின்சார சந்தையில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விலை மாறும்! peak demand என்று சொல்லும் அதிக பட்ச தேவை இருக்கும் நேரத்தில் அதன் விலை யூனிட்கு 12 ரூபாய்க்கும் மேல் இருக்கும். இதே இரவில் (அல்லது தேவை குறைந்த நேரத்தில்) ஒரு யூனிட்க்கு 2 ரூபாய்க்கும் விற்கும்! இது மின்சாரம் தயாரிக்கும் இடத்தில். அதன்பிறகு மின்சாரத்தை உங்கள் மாநிலத்திற்கு (ஊருக்கு) கொண்டு செல்லும் போது ஆகும் இழப்பு தனி, அது உங்களைச் சார்ந்தது.

இதனால்தான் விவசாயிகளுக்கு இலவச (விலையில்லா?) மின்சாரம் கொடுப்பது இரவில் மட்டுமே. குறைந்த விலையில் வாங்கி இலவசமாகக் கொடுப்பதால், ‘மானிய’ தொகை குறையும்.


மின்சாரம் கொண்டு வருதல் , இழப்பு



வாங்கிய மின்சாரத்தை கொண்டு வரும்போது இழப்பு தவிர, நினைத்த அளவு கொண்டுவர முடியாது, கொண்டு வரும் பாதை (corridor) போக்குவரத்து பாதை போல ஓரளவுதான் தாங்கும், இது சில வருடங்களுக்கு மின் இருந்ததை விட இப்போது பரவாயில்லை. ஆனால், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்றால் மின்சாரத்தை வேறு இடத்தில் வாங்கிவிடலாம், ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நம் மாநிலத்திலேயே பெருமளவு தயாரித்தால் தான் தமிழ் நாட்டில் எல்லா ஊருக்கும் மின்சாரம் கொடுக்க முடியும்.

இழப்பு என்பது உன்மையான இழப்பாக இருக்கலாம். மின்சாரம் கம்பியில் செல்லும் போது கொஞச்ம் வெப்பமாக மாறும், இதை தவிர்க்க இயலாது. அல்லது இழப்பு என்பது திருட்டாக இருக்கலாம். திருட்டு என்பது அந்த அந்த ஊரில் நடக்கும். ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் வரும் மின்சாரம் அதிக மின் அழுத்தத்தில் (very high voltage) இருக்கும், இதில் சும்மா கொக்கி போட்டு எடுக்க முடியாது. எனவே நம் ஊருக்கு மின்சாரம் வந்த பின்னர் தான் திருட்டால் ஏற்படும் இழப்பு இருக்கும். வேறு மாநிலத்தில் வாங்கியமின்சாரம் இங்கு வரும்போது உண்மையான இழப்பு 15 % லிருந்து 20% இருக்கலாம்.

டீசல் ஜெனரேட்டர்


சரி, அரசாங்க மின்சாரம் வரவில்லை, அத்தியாவசிய தேவைக்கு டீசல் ஜென்ரேட்டர் (Diesel Generator) பயன்படுத்தலாம் என்றால் எவ்வளவு செலவாகும்? ஒரு டீசல் ஜெனரேட்டரின் விலை அதிகம் இல்லை, டீசல் விலைதான் அதிகம். ஒரு ஜெனரேட்டர் 5 முதல் 8 வருடங்கள் வரும் என்று சொல்லி கணக்கிட்டால், ஒரு யூனிட்க்கு 18 ரூபாய் வரும். ஆனால் இதில் நீங்கள் ஜெனெரேட்டர் தயாரிக்கும் எல்லா மின்சாரத்தையும் பயன்படுத்தினால் தான் யூனிட்ட்க்கு 18 ரூபாய். நீங்கள் குறைவாகப் பயன்படுத்தினால், ஒரு யூனிட்க்கு 30 ரூபாய் வரை செலவழிப்பிர்கள்!

இன்வெர்டர்


இன்வெர்டர் (Inverter) என்ற வகை கருவியில் மின்கலம் அல்லது பேட்டரியில் மின்சாரத்திஅ சேமித்து பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்தினால் அதன் செலவு என்ன? மின்கலங்கள் சில வருடங்களில் மாற்ற வேண்டும். ஒரு மின்கலம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் வரும் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட் சேமிக்க 12 ரூபாய் வரை ஆகும். இது தவிர நீங்கள் மின்சாரத்தை சேமிக்கும்போது அரசுக்கும் ஒரு யூனிட்க்கு 4 ரூபாய் கொடுக்க வேண்டும். பேட்டரி விலை குறைவது போல இல்லை, அதனால் இந்த நிலைதான் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்வெர்டரில் நமக்கு உகந்தது என்ன என்றால், நமக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம், அதே சமயம் டீசல் ஜெனரேட்டர் போல சத்தம் மற்றும் புகை கிடையாது.

சோலார் பேனல்


சோலார் பேனல் (solar panel) வகையில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. சோலார் பேனல் 20 வருடங்களுக்கு வேலை செய்யும், ஆனால் முக்கால்வாசி முதலீடையும் முதல் நாளே செய்ய வேண்டும். நம்மில் பலரும் வீடு (apartment அல்லது தனி வீடு) வாங்க் வேண்டும் என்றால் வங்கியில் கடன் வாங்கிதான் வீடு வாங்குவோம். எல்லா பணத்தையும் முதலில் கொடு என்றால் 100க்கு 90 பேரால் வாங்க முடியாது. வங்கி ஏன் வீட்டுக்கு மட்டும் 20 வருடம் த்வணையில் கடன் தருகிறது? வீடு திருடு போகாது, அங்கேயே இருக்கும் என்பதால். சோலார் பேனலை எடுத்து செல்ல முடியும். அதனால் சோலார் பேனலுக்கு 20 வருடம் தவணையில் கடன் கொடுக்க மாட்டார்கள். எல்லா பணத்தையும் முதல் நாளே கொடு என்பதால் சோலார் பேனல் வாங்குவது மனதிற்கு பிடிக்காது.


வீட்டுக்கு பகலிலும் இரவிலும் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வேண்டும் என்றால் அதிக செலவு ஆகும். சோலார் பேனலில் பகலில் மட்டும் மின்சாரம் வரும். அதை சேமித்து இரவில் பயன்படுத்த, மின்கலம்/பாட்டரி தேவை. இன்வெர்டர் போல இதிலும் மின்சாரத்திஅ சேமிக்க மட்டும் ஒரு யூனிட்டிற்கு 12 ரூபாய் செல்வாகும். ஒரு பேச்சுக்கு நாம் செல்வு செய்தாலும், மூன்று நாட்கள் மழை என்றால் இரண்டாம் நாள் முதல் மின்சாரம் கிடையாது. எனவே சோலாரை மட்டும் நம்பி ஒருவர் வீட்டில் மின்சாரம் பயன்படுத்துவது நடைமுறையில் ஒவ்வாதது.


நடைமுறையில் எது சாத்தியம் ஆகலாம்?

பள்ளி, அலுவலகம் போன்ற இடங்களிலும், வீட்டிலும் பாட்டரி இல்லாமல், அல்லது குறைந்த அளவு பாட்டரி வைத்து சில விளக்குகள் மற்றும் மின் விசிறிகளை ஓட்ட இது பயன்படலாம். ஒரு கிலோ வாட் பேனல், பாட்டரி மற்றும் மற்ற சாதனங்களுடன் , 5 வருட கியாரண்டி உடன் 2 லட்சம் ஆகிறது. (சோலார் பேனலுக்கு 20 வருட கியாரண்டி, மற்ற பொருளகளுக்கு 5 வருடம்). இதில் 4 ட்யூப் லைட், 6 மின்விசிறிகளை ஓட்டலாம். 5 வருடம் கழித்து பாட்டரி மாற்ற வேண்டி வரலாம்.

விளம்பரத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சில மாநிலங்களில் அதிக கட்டணம் (யூனிட்க்கு ரூபாய் 18 வரை)வசூலிக்கிறார்கள். அந்த இடங்களிலும் சோலார் பேனல் பயன்படும். இதில் பகல் முழுதும் மின்சாரம் தயாரித்து, பேட்டரியில் சேமித்து, இரவில் பயன்படுத்த வேண்டும் என்பதால் பேட்டரி செலவு சற்று அதிகம், ஆனாலும் இது பரவாயில்லை என்று சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன

இந்த பதிவை தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு முன் தொடங்கினேன். நாளுக்கு நாள் எல்லா பொருள்களும் அதிக விலைக்குத்தான் விற்கின்றன. சோலார் பேனல் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது. பாட்டரி, கம்பி என மற்ற பொருள்களின் விலையும் கூடும். என் கணிப்பு என்ன என்றால், இன்னும் சில வருடங்களில் பேனலின் விலை சற்று குறையும், கம்பி பாட்டரிகளின் விலை கொஞ்சம் உயரும், ஆனால் சோலார் சிஸ்டம் (பேனல், பாட்டரி என்று அனைத்தும் சேர்ந்தது) அதே விலையில் இருக்கும். ஆனால், டீசல் ஜெனரேட்டர் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலை அதிகமாகும். அரசு வழங்கும் மின்சாரம் சரியாக எல்லா நேரமும் கிடைக்காது. பணத்தின் மதிப்பு குறையும். ஒரு சாதாரண bike வாங்கும் செலவு ஒரு லட்சம் ஆகலாம். அப்போது வீட்டுக்கும் ஆபிசுக்கும் சோலார் பேனலில் இரண்டு லட்சம் செலவு செய்து வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகும் என்று நினைக்கிறேன்.


டிஸ்கி: பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்று சொல்வார்கள், அந்த நிலைதான் இருக்கிறது. சொற்குற்றம் இருந்தால் விட்டு விடுங்கள், பொருள் குற்றம் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், திருத்தி விடலாம்.