1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Friday, September 21, 2012

சோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி1

இந்தப் பதிவில், காட்மியம் டெலுரைடு (cadmium telluride) என்ற வகை சோலார் செல் பற்றி பார்க்கலாம். இது பல CONTROVERSY என்ற சச்சரவுகளைக் கொண்டது. இப்போதைக்கு, வணிக ரீதியாக (economically, commercially) இதுதான் குறைந்த விலைக்கு தயாரிக்க முடிகிறது. நீங்கள் “எனக்கு இவ்வளவு யூனிட் மின்சாரம் வேண்டும். சோலார் செல் மூலம் வேண்டும். செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பல வருடங்களுக்கு வேலை செய்ய வேண்டும்” என்று சொன்னால், அதை பல வருடங்களுக்கு நல்லபடியாக வரும் வகையில் சிலிக்கன், சி.ஐ.ஜி.எஸ். மற்றும் காட்மியம் டெலுரைடு சோலார் செல்களால் செய்ய முடியும். இந்த மூன்றிலும் விலை குறைந்தது காட்மியம் டெலுரைடு.

ஆனால், காட்மியம் (cadmium) என்பது கொஞ்சம் விவகாரமான தனிமம். இதில் என்ன பிரச்சனை என்று இப்போது பார்க்கலாம். தப்பித்தவறி சோலார் செல் இருக்கும் இடம் தீப்பிடித்து எரிந்தால், அதில் இருக்கும் காட்மியமும் சேர்ந்து எரிந்தால், அது நச்சு வாயுவாக மாறும். அதனால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இதை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். இந்த செல்லை வாங்கிப் பயன்படுத்த தயங்குகிறார்கள். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களோ, “நாங்கள் இந்த சோலார் செல்லில் இருக்கும் காட்மியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம், நெருப்பு பட்டாலும் இந்த காட்மியம் வெளியே வராது, சோதனை மூலம் நிரூபிக்கிறோம்” என்று சொல்கின்றன.

அங்கே நிலைமை இப்படி இருக்க, நம் நாட்டில் உள்ள நிலைமை என்ன என்று பார்க்கலாம். இங்கே பல விதமான பேட்டரிகளில், காட்மியம் இருக்கின்றது. இவை ‘நிக்கல் காட்மியம்’ பாட்டரி அல்லது சுருக்கமாக ஆங்கிலத்தில் "Ni-Cd" என்று எழுதி இருக்கும். இது டிஜிட்டல் காமிரா, குழந்தைகளுக்கான சில ரிமோட் விளையாட்டு பொருள்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.தோராயமாக கணக்கிட்டால், ஒரு வீட்டிற்கு தேவையான சோலார் செல்லில் எவ்வளவு காட்மியம் இருக்கிறதோ, அதே அளவு காட்மியம் 10 அல்லது 15 பாட்டரிகளில் இருக்கிறது.


 இந்த பாட்டரிகளை குப்பையில் போட்டு எரிக்கக் கூடாது. ஏனென்றால் அதில் இருக்கும் காட்மியம் எரிந்தால் நச்சு வாயு வரும். ஆனாலும் நடைமுறையில் இதை நாம் குப்பையில் வீசி விடுகிறோம். குப்பையை நகராட்சி அள்ளி சென்று ஒரு இடத்தில் போடுகிறது. சென்னையில் ‘கொடுங்கையூர்’, ‘பள்ளிக் கரணை’ போன்ற இடங்களில் இதைப் பார்க்கலாம்.

பல சமையங்களில் குப்பையானது எரிக்கப் படுகிறது. இது சட்டப்படி தவறு என்றாலும், நடைமுறையில் தடுக்க முடிவதில்லை. அந்த வகையில் பார்த்தால், நமக்கு இப்போது இருக்கும் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏற்கனவே ஆபத்தில் இருக்கிறோம், இந்த சோலார் செல் பயன்படுத்தினால், ஆபத்து கொஞ்சம் அதிகமாகும் என்றுதான் சொல்ல முடியும். தவிர யாரும் விலை கொடுத்து வாங்கிய சோலார் பேனலை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிய மாட்டார்கள்.  இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு வேலை செய்த பின் ஒருவேளை எறியலாம்.

சரி, இந்த சோலார் பேனல் வீட்டில் இருக்கும்போது ஏதாவது காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு எரிந்தால் என்ன செய்வது?

வீட்டில் பல பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கின்றன. காட்மியம் பாட்டரிகளும் இருக்கலாம். இதனாலேயே வீடு எரியும்போது நச்சு வாயுக்கள் வரும். ஆனால் வீடு எரியும்போது எல்லோருடைய கவனமும், ”உடனடியாக உயிர் சேதத்தை தடுத்தால் போதும்” என்ற அளவில் இருக்கும். எவ்வளவு பொருள் நட்டம், நச்சு வாயு வந்து அதனால் பிறகு பாதிப்பு இருக்குமா? (Long term health issue) என்பது பற்றி கவலைப் படுவது இல்லை. இதுதான் உண்மை நிலை.

இந்த அளவிலேயே காட்மியம் டெலுரைடு சோலார் பேனல் பயன்படுத்துவதால் வரும் ஆபத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  மொத்தத்தில், இது விவாதத்திற்கு உரியது தான். அதே சமயம் இதற்கு சமமான அளவில் இருக்கும், இதற்கு சமமான அளவு தாக்கம் கொண்ட பிற பிரச்சனைகளை எப்படி அணுகுகிறோமோ, அதைப் போலவே இதையும் அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். பாட்டரி எரிந்து வரும் நச்சு வாயுவும், சோலார் பேனல் எரிந்து வரும் நச்சு வாயுவும் நம்மை ஒரே போலத்தான் பாதிக்கும். இப்படி இருக்கும்போது,பாட்டரி வாங்க தயங்காதவர்கள் சோலார் பேனல் வாங்க (நச்சுத்தன்மையை காரணமாகக் கொண்டு) தயங்கக் கூடாது.

எப்படி இருந்தாலும் சரி, இதை நாம் இப்போது வாங்க வேண்டியதில்லை, இது எப்படி இருக்கும், எப்படி தயாரிக்கலாம், எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்வோம், தெரிந்து கொள்வதால் எந்த ஆபத்தும் வராது அல்லவா!


2 comments:

வடுவூர் குமார் said...

lawforus என்ற பதிவில் மிகவும் விளக்கமாக சொல்லியிருந்தார்.நீங்கள் சொல்வதையும் படிப்போம்.
ஆவலுடன் காத்திருக்கேன்.

S. Ramanathan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார் அவர்களே. lawforus பதிவுகளை இப்போதுதான் பார்க்கிறேன், சோலார் பற்றிய practical விடயங்கள் பலவற்றை சிறப்பாக சொல்லி இருக்கிறார்.